பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் விடுதலை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தரப்பில் விடுதலை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த வாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் ஆளுநர் செயல்படுவது கூட்டாட்சி அமைப்பு மீதான அடியாகும் எனக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் உத்தரவை பிறப்பிப்போம் எனக் கூறி மே 4ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க | பேரறிவாளனை மத்திய அரசு ஏன் விடுவிக்க முடியாது? உச்சநீதிமன்றம் கேள்வி
இந்நிலையில், இன்று காலை உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யவுள்ளனர். தொடர்ந்து, மத்திய அரசின் கருத்தை கேட்ட பிறகு முக்கிய அறிவிப்புகளை நீதிபதிகள் வெளியிட வாய்ப்புள்ளது.