புதுச்சேரியில் வீட்டுக்கு சமைக்க வாங்கிச் சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அருகே முள்ளோடை-மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழி இறைச்சி வாங்கிச்சென்றார்.
அதனை சமைக்க முயன்றபோது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.
அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம் வந்து புகார் கூறவில்லை. உங்கள் பணத்தை வேண்டுமானால் திருப்பி வாங்கி கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.
இதுபற்றி, பாதிக்கப்பட்ட நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒரே நாளில் அண்ணன்- தம்பி தூக்கிட்டு தற்கொலை: கொரட்டூரில் சோகம்