கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்.29 ல் தொடங்கி மே 10ல் நிறைவடைகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்தல் மற்றும் பூக்குழி இறங்குதல் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.
இன்று(வியாழக்கிழமை)கோயில் கிராம கமிட்டி சார்பில் மஞ்சள் நீராட்டு விழா தொடங்கியது. அம்மன் உற்சவரை அழைத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மஞ்சள் நீராடி மகிழ்ச்சியை தெரிவித்துச் சென்றனர்.