நெல்லை அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை அருகே மரம் விழுந்து ஒரு பெண் உள்பட இருவர் பலியாகினர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த சாலை விரிவாக்கப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் சாலையில் உள்ள மரங்களை அகற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
அப்போது நெல்லை மாவட்டம் பத்தமடை சாலை விரிவாக்கப் பணியில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை அகற்றியபோது, சாலையில் வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவின் மீது மரம் விழுந்தது. இதில் பயணம் செய்த ரஹ்மத் என்ற பெண், ஆட்டோ ஓட்டுனர் காதர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேசிபி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதைத் கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சரியான ஊழியர்கள் இல்லாமல் மரத்தை ஜேசிபி மூலம் அகற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பலமுறை மரங்களை அகற்றும்போது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தக்காரரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.