கோவை: மேட்டுப்பாளையம் சமயபுரத்தில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்ற போது யானை, வனத்துறையினரை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து பாகுபலி என பொதுமக்களால் அழைக்கப்படக்கூடிய காட்டு யானை கடந்த 10 நாள்களாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள்ளும் விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து வருகிறது.
குறிப்பாக சமயபுரம் நெல்லிதுறை குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை பாகுபலி நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி சமயபுரம் ஊருக்குள் நுழைந்து அங்குள்ள கிராம சாலையின் நடுவே நடந்து சென்றது.
தகவலின்பேரில் இதையறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை பாகுபலியை விரட்ட முயன்றனர். அப்போது டார்ச்சு லைட்டுகளை வைத்து வனத்துறை ஊழியர்கள் பாகுபலியை விரட்ட முயன்றபோது காட்டு யானை பாகுபலி, திடீரென வனத்துறையினரை நோக்கி பிளிறியபடி விரட்டிச் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அங்கிருந்து தள்ளிச் சென்றனர்.
இதுவரை காட்டு யானை பாகுபலி யாரையும் தாக்கியது இல்லை என்ற எண்ணம் இருந்து வந்த நிலையில் காட்டு யானை, வனத்துறையினரை தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டு யானை பாகுபலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.