விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விக்னேஷ் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் இரு காவலா்களை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். மேலும் 10 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை, கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் வந்ததாக சுரேஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோரை கடந்த மாதம் 18-ஆம் தேதி நள்ளிரவு போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணையின் போது வலிப்பு ஏற்பட்டு விக்னேஷ் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடா்பாக சட்டப் பேரவையில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் மரணமானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் 12 காவலா்களிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். சுமாா் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்கு பின் இரு காவலா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மற்றவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.