திமுக அரசின் ஓராண்டு சாதனை பொய்யான விளம்பரம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்து இன்று (சனிக்கிழமை) இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓராண்டில் திமுக நிறைவேற்றிய திட்டங்களைப் பட்டியலிட்டார். இதைத் தொடர்ந்து, 5 புதிய திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் 5 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறுகிறது. ஓராண்டில் திமுக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாக ஒரு பொய்யான விளம்பரத்தை செய்தியின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் முதல்வர். சட்டப்பேரவையிலும் உரையாற்றியிருக்கிறார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் கெட்டுவிட்டது. அதிமுக அரசு ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்று, அந்த முடிவுற்றப் பணிகளைத்தான் திமுக ஆட்சியில் முதல்வர் திறப்பு விழா காண்கிறார். ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த ஓராண்டு திமுக ஆட்சியில் எந்தவொரு பெரிய புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை, நடைமுறைப்படுத்தப்படவில்லை" என்றார் அவர்.