வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது குறித்து இல்லத்தரசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ. 50 உயர்ந்து ரூ 1,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 2,508-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மளிகைப் பொருட்கள், சமையல் எண்ணெய் அரிசி என அனைத்தும் 20 சதவீத விலையேற்றம் கண்ட நிலையில், இன்று சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது நடுத்தர குடும்ப மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் தொடங்கி நகர்ப்புற மக்கள் வரை இலவச எரிவாயு எனும் திட்டத்தின் கீழ் சிலிண்டர் அடுப்புகளை வழங்கி மக்களை சோம்பேறி ஆக்கிவிட்டு தற்போது மெல்ல மெல்ல விலையேற்றம் செய்து வருவதாக அதிருப்தி தெரிவித்தனர்.
வாழ்வாதாரம் மேம்பட கூலி உயர்வு, சம்பள உயர்வு என்றும் ஏதும் இல்லாத இந்த நிலையில் இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் கூறினர்.