விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் 4 காவலர்கள் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை ஏப்ரல் 18-ல் தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும், காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார்.
விசாரணையின்போது வலிப்பு வந்து, விக்னேஷ் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் விக்னேஷ் மரணம் அடைந்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க- ஷாங்காயில் பள்ளி, கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே காவல் நிலைய எழுத்தர் முனாஃப், பவுன்ராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 4 காவலர்கள் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக காவல்நிலைய தலைமைக் காவலர் குமார், ஊர்க்காவல்படை காவலர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன் விக்னேஷ் மரண வழக்கில் இதுவரை 6 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.