ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு

மேட்டூர் அணையிலிருந்து குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12-ம்தேதி முதல் ஜனவரி 28-ம்தேதி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது.
ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பு


மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உட்பட12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும்.

முப்போக சாகுபடிக்கு 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் மழை பெய்தால் பாசன தேவை குறையும். கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழக முதல்வர் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டார்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர்  திறக்கப்படும். மேட்டூர் அணையின் வரலாற்றில் 89வது ஆண்டாக நடப்பு ஆண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையின் வரலாற்றில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறப்பது 19-வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100அடியாக உயர்ந்தது. அதன் பிறகு முழு கொள்ளளவை எட்டியது. 

இன்றுவரை மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 188 நாள்களாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறையாமல் உள்ளதால் மேட்டூர் அணையில் மீன் வளம் பெருகும் என்று மேட்டூர் அணை மீனவர்களும் டெல்டா பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் வெகுவாக அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு 1,724 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 6,318 கன அடியாக அதிகரித்துள்ளது.


 நீர்வரத்து அதிகரித்து வருவதால் கடந்த 01.05.2022 அன்று 105.50 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 106.66 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.66 அடியாக இருந்தது அணைக்கு வினாடிக்கு 6,318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.74 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com