சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியைக் கொன்றுவிட்டு மூட்டை மூட்டையாக நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு சென்ற சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை ஆந்திரம் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு ஆந்திரம் வழியாக நேபாளம் தப்பிக்க முயன்றவர்களை சுங்கச் சாவடியில் வைத்து ஆந்திரம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆந்திரம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவியிடம் இருந்து 8 கிலோ தங்கம், 50 கிலோ வெள்ளி நகைகள், 10 வைர மூக்குத்திகள், பிளாட்டனம் மற்றும் பணம் என ரூ.5 கோடி மதிப்புள்ள பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையின் பிரபல ஆடிட்டர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த், நில விற்பனை தொடர்பாக ரூ.40 கோடியை பரிவர்த்தனை செய்வதை லால் கிருஷ்ணா அறிந்துள்ளார்.
இதையடுத்து அந்த பணத்திற்காக ஸ்ரீகாந்தை கொலை செய்ததாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் சில திடுக்கிடும் தகவலை வெளிட்டுள்ளார்.
* சென்னை மயிலாப்பூர் வீட்டிலேயே தனித் தனியாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதாவை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளனர்.
* வீட்டில் ஏராளமான நகைகள் இருந்தது ஓட்டுநருக்கு தெரிய வந்த நிலையில், சாவி இல்லாததால் அமெரிக்காவில் இருந்து தம்பதி வரும் வரை காத்திருந்து கொள்ளை நடந்துள்ளது.
* கொலை குறித்து போலீஸ் அறியும் முன் நேபாளம் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தனர். சிசிடிவி கேமராவில் காட்சி பதிவாகும் ஹார்ட் டிஸ்க்-களை கழற்றி எடுத்துச் சென்றனர்.
* இருவரையும் கொலை செய்வதற்கு முன்பாகவே, ஆடிட்டரின் பண்ணை வீட்டில் உடல்களை புதைப்பதற்கு பள்ளம் தோண்டி வைத்துள்ளனர்.
* ஆடிட்டரையும், அவரது மனைவியையும் கொலை செய்துவிட்டு நேபாளம் தப்பிச் செல்ல முயன்ற ஓட்டுநர் லால் கிருஷ்ணாவின் செல்போனை டிராக் செய்ததன் மூலம் சில மணி நேரத்தில் ஆந்திரம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் லால் கிருஷ்ணா மற்றும் அவரது கூட்டாளி ரவியை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நெமிலிச்சேரியில் புதைக்கப்பட்ட ஆடிட்டர் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி அனுராதா உடல்கள் திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன், தடவியல்துறை இயக்குநர், காவல் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படுகிறது.