பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடத்த தமிழக முதல்வர் அனுமதி: தருமபுரம் ஆதீனம் பேட்டி

"நேற்றைய நாள் இரவு பட்டின பிரவேசம் சம்பிரதாயப்படி நடைபெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார்"
தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குரு முதல்வர் குரு பூஜையையொட்டி வருகின்ற 22ஆம் தேதி நடைபெற உள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். 

இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இதனிடையே, குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம், தொண்டைமண்டல ஆதீனம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது தருமபுரம் ஆதீனகர்த்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு சாதனையில் நேற்றைய நாள் மீண்டும் இந்த பட்டணப் பிரவேச விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்கு நமது நல்லாசிகள். இந்த விழாவை தொடர்ந்து நடத்தப்படும் என்ற நிலையில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சித்திருக்கிறார்.

அவர்களுக்கும், அறநிலைத்துறை ஆணையர், செயலர் அனைவருக்கும் எல்லா நலன்களும் வளங்களும் வாழ்த்துகின்றோம். மரபுவழிபட்ட இதுபோன்ற சம்பிரதாயங்களில் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை என்றைக்குமே மாறுபாடில்லாத வகையில் இருந்தது என்பதே இதன் மூலமாக நிருபித்து காட்டியிருக்கிறார்கள். 

தமிழ் வழியிலேயே இருந்து அவர்களுடைய முன்னோர்கள் எந்த அளவிற்கு ஆட்சி பீடத்தை நடத்தினார்களோ அதே வகையிலேயே தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய நாள் இரவு பட்டின பிரவேசம் சம்பிரதாயப்படி நடைபெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். 

அவர்களுக்கு எங்கள் நல்லாசிகள். ஆன்மீக மறுப்பாளர்கள் அவர்கள் கொள்கையில் அவர்கள் இருப்பது போன்று எங்கள் கொள்கையில் நாங்கள் இருந்து வருகிறோம், மனிதாபிமான அடிப்படையில் தோளில் சுமப்பது விமர்சிக்கப்படுகிறது.

இருந்தபோதிலும் அவரவர் சொந்த விருப்பத்தின் பேரிலேயே சுமக்கின்றனர், இறைவன் கொடுத்த தவத்தினால் கிடைப்பது இந்த பல்லக்கு, இதனை எளிமையாக நினைக்கின்றனர், தவம் உடையவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும் என அபிராமிபட்டர் தெரிவித்துள்ளார். பட்டிணப் பிரவேசம் நிகழ்வு முந்தைய ஆதினங்கள் நிறுத்தாமல்  செய்ததை தாங்கள் தொன்றுதொட்டு தற்போதும் செய்து வருகிறோம்" என்றார்.

'மகா சந்நிதானங்களை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவது தவறு'

இதுகுறித்து செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் கூறுகையில், "மனிதன் பிறந்தது முதல், இறக்கும்வரை யாரோ சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகா சந்நிதானங்களை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவது தவறு.

பட்டணப்பிரவேசம் என்பது ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு குருமகா சந்நிதானங்கள் செல்லக்கூடிய நிகழ்வு அல்ல. சிஷ்யர்கள் தங்களது குருவை தாங்கிச்செல்லக்கூடிய உத்ஸவம். இதனை ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதீன சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காக அதுகுறித்து பேசவேண்டும். தமிழக முதல்வர் பட்டணப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி வழங்கி நேற்று இரவு தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். தருமபுரம் ஆதீனப் பட்டணப்பிரவேசத்தில் ஆதீனங்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com