திமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், திமுக மாநிலங்களை உறுப்பினருமான திருச்சி சிவா மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு அளித்து, நேர்காணலில் பங்கேற்றார். ஆனால் சூர்யாவுக்கு திமுக தலைமை சீட் கொடுக்கவில்லை. இதனால் சூர்யா திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் சூர்யா.
சென்னையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். சூர்யாவுக்கு கட்சியில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந் 15 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். அனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமோ, முக்கியத்துவமோ கிடைக்கவில்லை. எனக்கு திமுகவில் எந்த பொறுப்பும் கிடைக்காமல் தடுப்பதில் எனது தந்தையும் முக்கிய பங்கு வகிக்கிறார்.
திமுகவின் மேல்மட்ட நிர்வாகிகள் போக்கு ஆட்சி வருவதற்கு முன்பு ஒரு மாதிரியாகவும், இப்போது ஒரு மாதிரியாகவும் உள்ளது.
திமுக மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை தூக்கிப்பிடித்து பதவி வழங்குகின்றனர். ஆனால் கட்சியின் கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் குறித்து எந்த கவலையும் படுவதில்லை. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் திமுக அழிந்துவிடும்.
திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக உழைக்க விரும்புகிறேன். எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்.
தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும். பதவி, அடையாளத்துக்காக நான் பாஜகவில் இணையவில்லை என சூர்யா கூறினார்.