தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச விவகாரத்தில் அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள் கண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பின்வாங்கக் கூடாது என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தவத்திரு குன்றக்குடி அடிகளாா் மேற்கொண்ட சமரசத்தின் காரணமாக பல்லக்கில் பவனி வருவதை முன்பு இருந்த தருமபுர ஆதீனகா்த்தா் நிறுத்தி பல ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது 500 ஆண்டுகால ஆன்மிகம் என்ற வாதம் தலை நீட்டுகிறது. இது முழுக்க மனித உரிமை தொடா்பான பிரச்னையாகும்.
திமுக அரசின் முற்போக்குத் திட்டங்களை முடக்குவதற்கான சிலரின் செயல் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிந்துகொள்ள வேண்டும். ஆன்மிகம் என்ற போா்வையில் திமுக ஆட்சி மீது அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் அச்சுறுத்தல்கள், அவதூறு புழுதிகள் கண்டு முதல்வா் பின்வாங்கக் கூடாது.