பட்டணப் பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் தான் அதை எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அண்ணன் தம்பிக்குரிய பாசம் என்றும் உள்ளது. திமுக நிறைய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 10 மணிநேர மின் தடை நிலவுகிறது. அதனைச் சரி செய்வதற்கு ஏதாவது நடவடிக்கையைத் திமுக அரசு எடுத்துள்ளதா?
இதையும் படிக்க- இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா
பட்டிண பிரவேசம் நிகழ்வில் ஆதீனங்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே திமுக அரசு அனுமதி வழங்கிவிட்டது. அதைப்போலவே மதுரையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்பதற்காக மருத்துவக் கல்லூரி துணைவேந்தரை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் சேர்த்தார்கள். இவையெல்லாம் தில்லி மேலிட உத்தரவுக்கு ஏற்ப திமுக அரசு நடத்தும் நாடகங்கள்தான். முதல்நாள் ஒன்று அறிவித்துவிட்டு மறுநாள் அதை மாற்றி அறிவிப்பது தான் திராவிட மாடல். எனவே அரசே பல்லக்கு தூக்குவதை அனுமதித்தாலும் நாங்கள் அதனை ஏற்கவில்லை. எதிர்க்கிறோம்.
இந்து மதத்தில் சாதிகளே கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சாதியக் கட்டுமானம் அடர்த்தியாக உள்ளது இந்தியாவில்தான். அதிலும் சாதியும் மதமும் இரண்டு கண்களாக கொண்டிருப்பது இந்து மதம் தான். அவரவர், அவரவர் தாய்மொழிமேல் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தாய் மொழியில் உறுதியாக இருப்போம். உலகத்தின் தொன்மையான மொழி என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.