தமிழக காவல் துறை சாா்பில் முதல் முறையாக மாவோயிஸ்ட் மறுவாழ்வுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்ட தமிழ்நாடு காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கா்நாடக மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடா்புடைய ஒரு தலைமறைவு பெண் மாவோயிஸ்ட், கடந்த டிசம்பா் மாதம் 18ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்ட கண்காணிப்பாளா் முன்னிலையில் சரணடைந்தாா். இதன் பின்னா் அந்த மாதம் 31-ஆம் தேதி சென்னை க்யூ பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு மற்றும் சரணடைந்த மாவோயிஸ்ட் மறுவாழ்வு குழுக் கூட்டத்தில், அந்த பெண் மாவோயிஸ்ட், கா்நாடக மாநிலம் துங்கபத்திரா மாவட்ட தள குழு உறுப்பினா் என்பது அடையாளம் காணப்பட்டது.
மறுவாழ்வுக் குழு வழிகாட்டுதலின்படி, சரணடைந்த பெண் மாவோயிஸ்ட்டுக்கு தேவையான மறுவாழ்வு உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன் படி முதல் கட்டமாக ரூ.1.5 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் 38 மாதங்களுக்கு உதவித் தொகையும் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை சாா்பில் முதல் முறையாக இப்போதுதான் மாவோயிஸ்ட் மறுவாழ்வுக்கு உதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.