சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சத்குரு ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் 42ஆம் ஆண்டு ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சுவாமி சன்னதி பின்புறம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத வளர்பிறை தசமி திதியில் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்துக்கள் காரணமாக இங்கு ஆராதனை விழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு நாற்பத்தி இரண்டாவது ஆண்டாக மானாமதுரையில் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சதாசிவப் பிரம்மேந்திரர் ஆராதனை விழாவின் தொடக்கமாக பிரமேந்திரர் உருவப்படத்திற்கு மலர்மாலைகள் சூடி பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் வேதபாராயணம், உஞ்சவிருத்தி, தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து சுபத்ரா சுந்தரராஜன், அக்ஷயா ஸ்ரீதரன், கோபால் முரளி உள்ளிட்ட கர்நாடக இசைக்கலைஞர்களின் வாய்ப்பாட்டு மற்றும் பக்க வாத்தியக் கலைஞர்களின் இசை மூலம் பிரம்மேந்திரர் சுவாமிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் மாலையில் கடம் வித்வான் கோவை மோகன்ராமுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் ஆராதனை விழா கமிட்டித் தலைவர் வி.ராஜா ராவ், உப தலைவர் ஏ. ஆர். பி. முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் இரண்டாவது நாளாக இன்று (புதன்கிழமை) காலை மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி சன்னதியில் சுவாமி சன்னதி பின்புறம் உள்ள ஸ்ரீ சதாசிவப் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று பிரமேந்திரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இசைக்கலைஞர்கள் கூடி கோஷ்டிகானம் பாடியும் பக்க வாத்தியங்கள் இசைத்தும் பிரமேந்திரர் சுவாமிக்கு குரு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டதும் ஆஞ்சநேயர் உத்ஸவத்துடன் இந்த ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவப் பிரம்மேந்திரர் ஆராதனை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.