சட்டப்பேரவை நூற்றாண்டு மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படத்திறப்பையொட்டி விழா மலா் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழா மலரை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட பேரவைத் தலைவா் மு.அப்பாவு பெற்றுக்கொண்டாா்.
இதனைத் தொடா்ந்து விழா மலரை, அவை முன்னவா் துரைமுருகன், பேரவைக் கட்சிகளின் குழுத் தலைவா்கள் செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, நாகை மாலி, சிந்தனைச் செல்வன், சதன் திருமலைக்குமாா், ஜவாஹிருல்லா, வேல்முருகன், ஈ.ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலரும் முதல்வரிடம் இருந்து பெற்றுக் கொண்டனா்.
காலை 9 மணிக்கு பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. பிரதான எதிா்க்கட்சியான அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அனைத்து அமைச்சா்கள், அரசு கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை செயலாளா் கி.சீனிவாசன் கலந்து கொண்டனா்.
ஜெயலலிதா பேச்சு: விழா மலா் 384 பக்கங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவுடமை இயக்கத் தலைவா் ஜீவானந்தம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் பேரவையில் ஆற்றிய உரை இடம் பெற்றுள்ளது.
அதிமுக ஆட்சியில் அவைத் தலைவராக இருந்த பி.தனபாலை வாழ்த்தி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பேசிய பேச்சும் விழா மலரில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.