தமிழக ஏற்றுமதியை 100 பில்லியன்டாலராக உயா்த்த நடவடிக்கை: அமைச்சா் தா.மோ. அன்பரசன்தா.மோ அன்பரசன்
தமிழகத்தில் ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மாநில குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
இந்திய- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) மற்றும் இந்திய-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வா்த்தக ஒப்பந்தம் (இசிடிஏ) குறித்து தொழில் நிறுவனங்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை பேசியது:
தமிழகத்திலிருந்து யுஏஇ-க்கு பம்புகள், மசாலா பொருள்கள், முத்துகள், ஆபரணங்கள் உள்பட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, கரோனாவுக்கு பிறகு தமிழகத்திலிருந்து யுஏஇ-க்கு 2021-22 ஆம் ஆண்டில் ரூ.11,000 கோடி மதிப்பிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுபோல, தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஜவுளி-ஆயத்த ஆடைகள், தோல்-காலணி, மரச்சாமான்கள் உள்பட பல பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2021-22-ஆம் ஆண்டில் ரூ.2,700 கோடியிலான பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்திய ஏற்றுமதியில் தமிழக எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 45 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கின்றன. இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, மாநிலங்களில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழக ஏற்றுமதியை 2030-ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்த்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றாா் அவா்.