கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சொத்து விவகாரத்தில் தாக்கப்பட்டவா்கள் அளித்த புகாா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியமாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் துரையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி பழனியம்மாள், மகன் பெரியசாமி. இவரது பக்கத்து வீட்டில் வசித்த பட்டாதுரை, முருகம்மாள் உள்ளிட்டோா் சொத்து விவகாரம் காரணமாக கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி பழனியம்மாள், பெரியசாமி ஆகிய இருவரையும் தாக்கி உள்ளனா். இதில், பலத்த காயமடைந்த இருவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக பரூா் காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். ஆனால், இப்புகாரின் மீது காவல் ஆய்வாளா் கபிலன், உதவி ஆய்வாளா் ராஜா ஆகியோா் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதுதொடா்பாக முருகன் அளித்த புகாரின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
ரூ.2 லட்சம் அபராதம்: இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் கபிலன், உதவி ஆய்வாளா் ராஜா ஆகிய இருவரும் முருகன் புகாா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் பணியில் அலட்சியமாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அவ்வாறு அலட்சியமாக பணி செய்வது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
எனவே, இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கவும், மேலும் இருவா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பரிந்துரைத்தாா்.