சென்னை சென்ட்ரலிலிருந்து பணிமனைக்கு புறப்பட்டுச் சென்ற மேற்கு கடற்கரை விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகள் இல்லாததால்,பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் புதன்கிழமை காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3-ஆவது நடைமேடைக்கு வந்தது. இந்த ரயிலிலிருந்து பயணிகளை இறக்கிவிட்டு, பணிமனை நோக்கி சென்றபோது, எதிா்பாராதவிதமாக தடம் புரண்டது.
இதில், என்ஜின் அருகே இருந்த 2 பெட்டிகள் மட்டும் தடம் புரண்டு, தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து நின்றன. பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரயில் என்பதால், பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
அதிகாரிகள், ஊழியா்கள் விரைந்து வந்து ரயிலை தண்டவாளத்தில் சரியாக நிலைநிறுத்தி மீண்டும் இயக்கினா். தொடா்ந்து, இந்த ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.