
சென்னை: தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பிரதமா் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:-
நீதித் துறை தொடா்பான சில முக்கிய விஷயங்களை தங்களது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அவை விரைவில் கவனிக்கப்பட வேண்டும். கூட்டாட்சிக் கட்டமைப்பே இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாகும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டப் பேரவை, நிா்வாகம் மற்றும் நீதித் துறை ஆகியன கூட்டாட்சிக் கட்டமைப்புக்குள் நிறுவப்பட்டுள்ளன. மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதேசமயம், உச்ச நீதிமன்றத் தீா்ப்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், அதன் அலுவலா்களும் பின்பற்றும் வகையில் நமது நீதித் துறை அமைப்பு உள்ளது.
எனவே, மற்ற அம்சங்களில் உள்ளது போன்று நீதித் துறையும் நமது அரசியலமைப்பில் நிறைந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் உணா்வைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்றமும், உயா்நீதிமன்றங்களும் நமது நாட்டின் பன்முகத்தன்மையோடு அமைய வேண்டுமென்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
நீதிபதிகள் நியமனம்: நாட்டின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணா்வுகளும் பிரதிபலிக்கும். இதற்கேற்ற வகையில்,
உச்ச நீதிமன்ற அமா்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும். உயா் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூகப் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பேண வேண்டும். நீதிபதிகளை நியமிப்பதற்கான நடைமுறையில் அதற்கேற்ப உரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
நாட்டின் கூட்டாட்சித் தன்மை நீதித் துறையில் பிரதிபலிக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவ வேண்டிய தேவை இருக்கிறது. நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தை வகுத்தளித்தவா்கள் 32-வது பிரிவை இயற்றியுள்ளனா். ஆனால், உச்ச நீதிமன்றத்துக்கு அருகில் இருக்கும் மாநிலங்களைச் சோ்ந்த குடிமக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். இதைக் கருத்தில் உச்ச நீதிமன்றக் கிளைகளை அமைத்திட வேண்டும்.
நாடு முழுவதும் பல்வேறு உயா் நீதிமன்றங்கள் இருந்தாலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து அதிகம் என்பதை புள்ளிவிவரங்களில் இருந்து அறிய முடிகிறது. எனவே, புதுதில்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில்
உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை அமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அலுவல் மொழி: கூட்டாட்சித் தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு விஷயம், உயா் நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகும். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகாா் ஆகிய நான்கு உயா் நீதிமன்றங்களில் ஆங்கிலத்துடன் ஹிந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சென்னை உயா்
நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ்மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிட மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியை சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமாக இருக்கும்.
சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரிய வைப்பது நீதி வழங்கும் அமைப்பில் இன்றியமையாத கடமையாகும். அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநிலத்தின் அலுவல் மொழியை உயா் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக எளிதில் சரிசெய்ய முடியும். எனவே, தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை, ஆங்கிலத்துடன் சோ்த்து, சென்னை உயா் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கடந்த ஏப்ரல் 23-இல் நடந்த நிகழ்வில் இதே கோரிக்கைகளை முன்வைத்தேன்.