மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தி முடிப்பதற்காக தமிழக அரசின் சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட், இந்தியாவிலேயே முதன்முறையாக, சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலையில் நடைபெறவுள்ளது. தமிழக அரசு, அகில இந்திய செஸ் சம்மேளனம், தமிழக செஸ் சங்கம் உள்ளிட்டவை இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
ஏற்கெனவே செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியை நடத்துவதற்காக ரூ.92.13 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க, நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக மேலும் ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது.
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான செலவை தமிழக அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடிப்பதற்காக சிறப்புக் குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிதியாதாரங்கள், மின்சாரம், ஏற்பாடு பணிகள், உணவு என மொத்தம் 18 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.