கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் அமைந்துள்ள, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில், பங்காரு அடிகளாரின் 82 -ஆம் ஆண்டு அவதார நாளையொட்டி, தலைவர் எம்.சாம்பசிவம், செயலாளர் என். செல்வராஜ், பொருளாளர் ஏ.சண்முகம் ஆகியோரின் ஆலோசனைப்படி, சிறப்பு கலச விளக்கு பூஜை நடத்தப்பட்டன.
கூத்தாநல்லூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்
முன்னதாக, கோயில் வளாகம் முன்பு சக்தி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில், கலச வேள்வி யாகம் தொடங்கியது.
கலசங்களுக்கு சுமங்கலிப் பெண்கள் கலசத்திற்கு மந்திரங்கள் முழங்க கலச பூஜை செய்யப்பட்டன. தொடர்ந்து, யாக பூஜையில், பூர்ணாகுதி செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. யாக பூஜையில் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.