தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.
இந்நிலையில், 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இன்று வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
வேட்பு மனுக்களைத் தாக்கல் மே 24ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மே 31ஆம் தேதியாகும். வேட்புமனு பரிசீலனை ஜூன் 1, வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள் ஜூன் 3 ஆகும்.
ஜூன் 10ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளன.
தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2022 முதல் 31.05.2022 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.