தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத்தின் 164 வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய அவர், தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக் கழகம் எனக் குறிப்பிட்டார்.
அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டதுதான் 'நான் முதல்வன் திட்டம்'. இளைஞர்களுக்கு அனைத்து நலன்களையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது.
வசதி படைத்தவர்கள் தனியார் மையங்கள் மூலம் பயிற்சி எடுத்துச் செல்கின்றனர்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவிகளின் நலன் கருதி தொடர்ந்து நிதி வழங்கப்படும்.
மாணவர்களின் திறமை மற்றும் தகுதிக்கேற்ப சிறப்பான எதிர்காலம் அமையும். அதற்கேற்ப படிப்பையும் இறுதி வரை தொடர வேண்டும்.
வேலைக்கு தகுந்தாற்போல் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல நிறுவனங்கள் கூறுகின்றன. வேலைக்கு ஏற்ற தகுதிகளை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் அடுத்தக்கட்ட உயர்வுக்கு பல்கலைக் கழகத்தில் பெறும் பட்டம் ஓர் அடித்தளம். வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞர்களும் குற்றம் சுமத்தாத நிலையை தமிழகம் எட்டும் எனக் குறிப்பிட்டார்.