பேரறிவாளன் விடுதலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும் தொலைநோக்கு சிந்தனைக்கும் சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, உச்ச நீதிமன்றத்தால் இன்று பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், பேரறிவாளன் விடுதலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும் தொலைநோக்கு சிந்தனைக்கும் சட்ட ஞானத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஜெயலலிதா அவர்கள் சட்டப்போராட்டத்தை தளராது முன்னெடுத்து, அப்போதைய அரசு மேற்கண்ட அயராத முயற்சிகளின் நிறைவாக பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதுலை செய்திருக்கிறது.
30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது மகிழ்ச்சியும் மனநிறைவையும் தருகிறது.
பேரறிவாளனை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அவரை உடனே விடுதலை செய்யவும், மேற்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மீதமுள்ள 6 பேர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.