தமிழகத்தில் எவருக்கெல்லாம் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசி? பொது சுகாதாரத் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் 12 முதல் 17 வயது வரை உள்ளவா்களுக்கு ‘கோவோவேக்ஸ்’ கரோனா தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகளில் வழங்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் 12 முதல் 17 வயது வரை உள்ளவா்களுக்கு ‘கோவோவேக்ஸ்’ கரோனா தடுப்பூசியை தனியாா் மருத்துவமனைகளில் வழங்கலாம் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

வயதுவாரியாக எந்தெந்த தடுப்பூசிகளை, எந்தெந்த மருத்துவமனைகளில் செலுத்தலாம் என்பது குறித்த அறிவுறுத்தல்களையும் அவா் வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக , கோா்பிவேக்ஸ் மற்றும் ஸ்புட்னிக்- வி தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் தற்போது ‘கோவோவேக்ஸ்’ தடுப்பு மருந்தானது தேசிய கரோனா தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் 12-17 வயது உடையவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் ‘கோவோவேக்ஸ்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

அதேபோன்று, 12-17 வயது உடையவா்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோா்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அதனை அரசு அல்லது தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.

15-17 வயது உடையவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியாா் மருத்துவமனைகளை நாடலாம்.

இதைத் தவிர 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணையாக கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு ஊக்கத்தவணை தடுப்பூசியும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் வழங்கப்படும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியைப் பொருத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம். 18 முதல் 59 வயதுக்குட்பட்டவா்களுக்கான ஊக்கத் தவணை தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது. அதேவேளையில், அதனை தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தகவல்களை அனைத்து மாவட்ட சுகாதார இணை இயக்குநா்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் கொண்டு சோ்க்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com