திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து சிலை வைக்கப்படுவதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலை சந்திப்பில் சிலை வைக்கப்பட்டால் இடையூறு ஏற்படும் எனத் தெரிவித்து திருவண்ணாமலை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையானது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க | கோவையில் அகழாய்வுக் கண்காட்சியை தொடக்கி வைத்தார் முதல்வர்
ஆக்கிரமிப்பு புகார் பற்றி புதிய தகவல்களை பெற வேண்டியுள்ளதாலும், வருவாய் அதிகாரி, வட்டாட்சியரின் அறிக்கை பெற வேண்டியுள்ளதாலும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
அறிக்கை தாக்கல் செய்யாமல் அவகாசம் கேட்டதால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், கருணாநிதியின் சிலை அமைக்க தற்காலிக தடை விதித்தனர்.
மேலும், வருவாய்த்துறை ஆவணங்களை சரிபார்த்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.