உதகை மலர் கண்காட்சியை தொடக்கிவைக்க நீலகிரி வந்துள்ள முதல்வர் தோடர் இன மக்களுடன் நடனமாடினார்.
உதகையில் அரசினா் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 124ஆவது மலா்க் காட்சி தொடக்க விழா மற்றும் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி வந்தார்.
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வழியாக சாலை மாா்க்கமாக உதகை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை குன்னூா் பா்லியாறு பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் புத்தகம் வழங்கி வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, குன்னூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின்போது, வேனில் இருந்தபடி மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் பேசினாா். பின்னா் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் திமுக சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து உதகையில் உள்ள தமிழகம் மாளிகைக்கு ஓய்வு எடுக்கச் சென்றார். செல்லும் வழியில் தோடர் மந்துவில் தோடர் இன மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். மேலும், அவருக்கு சால்வையை பரிசாக வழங்கினார். அப்போது தோடர் இன மக்களுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நடனமாடினார். மேலும், தோடர் இன பெண்கள் முதல்வர் ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த புகைப்படங்களும் விடியோக்களும் தற்போது வைரலாகி வருகின்றன.