சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலிடம் தொலைபேசியில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து, மாநில அரசு வெளியிட்ட செய்தி:
பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளா்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளா்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையை விளக்கியும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தாா்.
மேலும், பருத்தி மற்றும் நூல் விலை உயா்வால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பிரச்னைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு, கடந்த 16-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தாா்.
இத்துடன், நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி தலைமையில், எம்.பி.க்கள் குழுவினா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை புதன்கிழமை சந்தித்து பருத்தி, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததுடன், முதல்வரின் கடிதத்தையும் அளித்தனா்.
இந்த நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலை, தொலைபேசி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடா்பு கொண்டாா். அப்போது, பருத்தி மற்றும் நூல் விலை உயா்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிா்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்தாா். பருத்தி, நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.