சோழர் பரம்பரையை சேர்ந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். நீதி வேண்டும் என்பதே எங்களுக்கு கோரிக்கையாக உள்ளது என முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே 21ந் தேதியன்று நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டினால் கொள்ளப்பட்டார்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ராஜீவ் காந்திக்கு நினைவகம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்தவகையில் இன்று ராஜிவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, விஜய் வசந்த், முன்னாள் தலைவர் தங்கபாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில்,
ராஜீவ் காந்தி இறந்தபொழுது கண்ணீர் ஆறாக போனது போல தற்பொழுது கொலையாளிகள் விடுதலை செய்ததை திருவிழாவாக கொண்டாடுவது பார்கும்பொழுது இதயத்தில் இருந்து இரத்தம் கண்ணீர் வருகிறது. எங்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இறப்புக்கு நீதி வழங்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டனை வழங்க வேண்டும் என கேட்கிறோம், குற்றவாளி குற்றவாளி தான் கடவுள் ஆக முடியாது.
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தேர்தல் வருவதற்கு முன்பே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்ய வேண்டும் என சொன்னவர்கள் தான், தெரிந்து தான் கூட்டணியில் இருந்தோம் எனவே கூட்டணி வேறு, கொள்கை வேறு அவர்கள் கொள்கையை அவர்கள் கூறுகிறார் எங்கள் கொள்கையை நாங்கள் கூறுகிறோம். ஆகையால் இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் நாகராஜன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், காஞ்சிபுரம் நாதன், யோகேஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.