வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அக்ரஹாரம் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவிற்கு, கோயில் காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் வரி வசூல் செய்யப்பட்டது.
வாழப்பாடி அக்ரஹாரத்தில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சென்றாயப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் தேர்த்திருவிழா செலவிற்கு, கோயில்காளை அலங்கரித்து அழைத்து சென்று, பொதுமக்களிடம் வரி (நன்கொடை) வசூல் செய்வது பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு ஜூன் மாத தொடக்கத்தில், இக்கோயில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவிற்கு பொதுமக்களிடம் வரி (நன்கொடை) வசூலிப்பதற்காக, கோயில் காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற கோயில் நிர்வாகிகள், ஊர் பெரியதனக்காரர்கள், முக்கிய பிரமுகர்கள் வீடுகளிலும், பொதுமக்களிடம் பாரம்பரிய முறைப்படி வரி வசூல் செய்தனர்.
கோயில் காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பாரம்பரிய முறைப்படி வீடுகள் தோறும் வரி வசூல் செய்யப்பட்டது.
இந்த கோயில் காளைக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், பசுந்தீவனம் கொடுத்தும் பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.
வரி தண்டல் செய்ய வந்த கோயில் நிர்வாகிகளுக்கு, பொதுமக்கள் குளிர்பானங்கள், இனிப்பு அவுல் கடலை, பழங்கள் கொடுத்து உபசரித்தனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி ராஜேந்திரன், வெங்கடாசலம் ஆகியோர் கூறியதாவது:
200 ஆண்டுகள் பழமையான சென்றாயப் பெருமாள் கோயிலில், கோயில் காளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பொதுமக்களிடம் வசூல் செய்வது வழக்கமாக தொடர்ந்து வருகிறது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு, நிகழாண்டு நடைபெறும் தேர்த் திருவிழாவிற்கு, கோயில் காளையை அழைத்துச் சென்று, பாரம்பரிய முறைப்படி வரிவசூல் செய்வதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது என்றனர்.