டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உள்ளிட்ட அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
மேலும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம். செல்வகணபதி, எஸ். ஆர். சிவலிங்கம், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.
இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் மத்திய மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தொப்பூர் வழியாக மேட்டூருக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு திமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று இரவு மேட்டூரில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை விடுவிக்க உள்ளார்.