ஈரோடு: சிலம்பம், நுன்ஜாக்கினை 1.20 மணி நேரம் இடைவிடாமல் சுழற்றி நோபால் உலக சாதனை புத்தகத்தில் ஈரோட்டைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் புத்தாஸ் சிலம்பாட்ட டிரஸ்ட் மற்றும் இணைந்து ஈரோட்டில் நேற்று நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தியது. இதில், 10 வயது பிரிவில் திக்ஷா சக்தியும், 7வயது பிரிவில் சிவிக்ஷா சக்தி ஆகியோர் பங்கேற்று ஒற்றைகம்பு சிலம்பமும், நுன்ஜாக்கும் இடைவிடாது சுழற்றினர். மாணவி சிவிக்ஷா சக்தி, 1 மணி நேரம் 5 நிமிடம் 6 விநாடியும்(1.05.06) திக்ஷா சக்தி 1 மணி நேரம் 20 நிமிடம் 3 விநாடியும்(1.20.03) சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்று சாதனைப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து நோபால் உலக சாதனையின் முதன்மை அலுவலர், மாநில நடுவர் துரைராஜ் ஆகியோர் மாணவிகளை பாராட்டி நோபல் உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு, சிலம்பாட்ட கழக தலைவர் யூ.ஆர்.சி.தேவராஜ் தலைமை தாங்கினார். அக்னி ஸ்டீல் இயக்குநர்கள் சின்னச்சாமி, தங்கவேல், ராஜாமணி சின்னச்சாமி, மாணவிகளின் பெற்றோர் சக்தி கணேஷ், தீபா, கிரின் பில்ட் இயக்குநர் பாலு, பிரியா, டிப்ஸ் பள்ளி இயக்குநர் சிவகுமார் வி.வி நேஷனல் இயக்குநர் செந்தில் முருகன், மற்றும் ஈரோடு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், மாணவிகளின் பயிற்சியாளருமான கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.