சென்னை சூளையில் குப்பைத் தொட்டியில் மனித எலும்புக் கூடு
கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரி கலத்தி அப்பா பிரதான சாலையில் இரவு நேரங்களில் சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல தூய்மைப் பணியாளர்கள் வீதிவீதியாகச் சென்று குப்பைத்தொட்டியில் இருக்கும் குப்பைகளை அகற்றி வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு கலத்தி அப்பா பிரதான சாலையில் குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் பையில் மனித எலும்புக் கூடு மற்றும் நான்கு எலும்பு த் துண்டுகள் கிடந்ததைப் பார்த்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பேரி காவல் நிலைய போலீசார் மனித எலும்புக்கூடு மற்றும் நான்கு எலும்புத் துண்டுகளை கைப்பற்றி சென்னை அரசு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு உடற்கூறு ஆய்வு செய்தபின் எலும்புக்கூடு யாருடையது என்பது தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவித்தனர். எலும்புக் கூடுகள் முழுவதும் வார்னிஷ் அடித்து வைக்கப்பட்டுள்ளதால் மருத்துவ மாணவர்கள் பயிற்சிக்காக பயன்படுத்தும் எலும்புக்கூடுகளா அல்லது எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்ட தெருவில் நான்குக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளதால் அவர்கள் வேறு எதுவும் சோதனைக்காக பயன்படுத்திவிட்டு அதனை குப்பைத்தொட்டியில் வீசி உள்ளனரா என்பது குறித்தும் வேப்பேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகராட்சி குப்பை தொட்டியில் மண்டையோடு மற்றும் எலும்பு கூடுகள் கிடைக்கததால் இரவு அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.