போக்குவரத்துப் பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அடையார் மற்றும் திருவான்மியூர் பணிமனைகளில், அதிக நாள்கள் பணிக்கு வராத பணியாளர்களுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கலந்துரையாடினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளிடமும் அன்பாகவும், கனிவாகவும் நடந்து கொண்டு, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் நீங்கள் பணியாற்றிட வேண்டும். போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவை ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும்.
சாதாரணமாக நீண்ட நாட்கள் பணிக்கு வராத பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை தான் மேற்கொள்ளப்படும். ஆனால், நாங்கள் அப்படி இல்லாமல், உங்களை எல்லாம் அழைத்து பேசி, குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு, தொழிலாளர்களான உங்கள் மீது கொண்ட அக்கறையே காரணமாகும்.
இதையும் படிக்க- கருணாநிதி சிலையின் கீழ் பொறிக்கப்பட்ட 5 கட்டளைகள்
இந்த அரசும் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட அரசாகும். மேலும், நீங்கள் தற்பொழுது அடிக்கடி எடுக்கும் விடுப்பானது ஓய்வு பெறும் காலத்தில் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, இனிவரும் காலங்களில் நீங்கள் அனைவரும் முழுமையாக பணிக்கு வந்து, அனைத்துப் பேருந்துகளையும் இயக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
முன்னதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர், அடையார் பணிமனையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேருந்தினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பணியாளர்களின் ஓய்வறை, தகுதிச் சான்று பிரிவு, பண்டக சாலை மற்றும் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.