விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவர் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர். மேலும் சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் ஜெகதீஷ் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.
இந்த தகவலை அறிந்த சூர்யா உயிரிழந்த ஜெகதீஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க நேற்று நாமக்கல் சென்றார். பின்னர் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற சூர்யா உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகாவுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஜெகதீஷின் உருவ படத்திற்கு சூர்யா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அப்போது அவர் உறுதி அளித்தார். நடிகர் சூர்யாவின் திடீர் வருகை ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜெகதீஷனுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.