இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா பேரிடரின் போது, நாடு முழுவதும் நிறுத்தப்பட்ட ரயில்களில் மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயிலும் ஒன்று. இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்றுமுதல் மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயிலும், ராமேசுவரம் - மதுரை பயணிகள் ரயிலும் இயக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று காலை 6.35 மணிக்கு மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. மாலை ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு இயக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | உதயநிதியை அமைச்சராக்க அன்பில் மகேஷ் தலைமையில் தீர்மானம்
இவ்விரு வழித்தட ரயில்கள் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், உச்சிபுளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாசேத்தி, திருப்புவனம், சிலைமான், மதுரை கிழக்கு ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழிதடத்தில் பயணிகள் ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.