திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டதையடுத்து மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது அரசு அலுவலங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திருச்சி சென்ற அவர், திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மக்களிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வின்போது நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வினையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு!
அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.
அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்...' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ஆய்வு செய்த விடியோவையும் பகிர்ந்துள்ளார்.