சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இனிப்புகளை பரிசாக வழங்கினார். இதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜிக்கு புத்தகங்களை பரிசாக அளித்தார்.
இரண்டு நாள்கள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்றார்.
அவரை பூங்கொத்து கொடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் படத்தை வணங்கி மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார். பின்னர் சுமார் அரை மணிநேரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி கலந்துரையாடினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதில் இரு மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பின் முடிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு புத்தகத்தைப் பரிசாக வழங்கினார். பதிலுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி குடுவையில் கொண்டுவந்த இனிப்புகளைப் பரிசாக வழங்கினார்.