குடியாத்தம் அருகே, குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட ஒரு ஜோடி வைரக் கம்மலை கண்டுபிடித்த தூய்மைப் பணியாளா்களுக்கு நகராட்சியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
குடியாத்தம் - பலமநோ் சாலையில் வசிப்பவா் கல்பனா. இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் சாமி கும்பிட்டபோது, தங்க நகைகளை பூஜையில் வைத்திருந்தாா்.
பின்னா் அவா், குப்பைகளை பையில் போட்டு நகராட்சி குப்பைத் தொட்டியில் போட்டுள்ளாா். நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வந்து அந்த குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை சேகரித்து கிடங்குக்கு கொண்டுச் சென்றனா்.
இந்நிலையில் கல்பனா பூஜையில் வைத்த நகைகளில் ஒரு ஜோடி வைர கம்மலை காணவில்லை. தவறுதலாக அதை குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா உடனடியாக குடியாத்தம் திமுக நகரமன்ற தலைவர் செளந்தராஜன் அவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே குடியாத்தம் நகராட்சி குப்பைகளை அள்ளிக்கொண்டு சென்ற வாகனத்தை மீண்டும் அந்த பகுதிக்கு வர வைத்து குப்பைகள் அனைத்தையும் கீழே கொட்டி தூய்மைப் பணியாளர்கள் அதில் இருந்த வைர கம்மலை எடுத்து நகா்மன்றத் தலைவா் செளந்தரராஜனிடம் கொடுத்தனா்.
அவா் அதை கல்பனாவிடம் வழங்கினாா். வைர கம்மலை கண்டுபிடித்த தூய்மைப் பணியாளா்கள் கோபால், விஜய் ஆகியோருக்கு நகராட்சியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதையும் படிக்க: திருமணத்துக்கு புறம்பான உறவு: ஜீவனாம்சம் மறுப்பு!
நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா். துணைத் தலைவா் பூங்கொடிமூா்த்தி, நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, பொறியாளா் பி.சிசில் தாமஸ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.