நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயா்த்தி வழங்க வலியுறுத்தி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் முதல்வர்கள் தான் மாறுகிறார்கள். முடிவுகள் மாறுவதில்லை. ஆட்சிகள் தான் மாறுகிறது மக்கள் அவலங்கள் மாறுவதில்லை. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீத வரை உள்ள நெல்லை கொள்முதல் செய்திடவும். கடந்த பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்காத பயிர் காப்பீடு தொகையினை உடனடியாக வழங்கிடவும். மாவட்டத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதே. எனவே, உடனடியாக பாசன வாய்க்கால்களை தூர்வாரி விவசாயம் தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிக்க | நாளை யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்டச் செயலர் (பொ) வி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ஆர்.தமிழ்ச்செல்வன் (மன்னார்குடி மேற்கு) ஆர் பழனிவேல் (நீடாமங்கலம் வடக்கு), எஸ் .செல்லதுரை (தெற்கு), தங்க.கோபி (பேரூர் கழகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் மாவட்ட செயலர்கள் ஏன். முத்தையா,என். சண்முகராஜ்,மாவட்ட அவைத் தலைவர் பி.எல். தமிழரசன்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயபால்,மாவட்ட பொருளாளர் ஆர்.கே. வாசுதேவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஏ. முருகையன்,ஆர்.ராணி பொதுக்குழு உறுப்பினர் எம்.சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
ஆர்ப்பாட்டத்தில், திரளான தேமுதிகவினர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் .
கட்சி நகரச் செயலர் ஏ. ஆர் .கார்த்திகேயன் வரவேற்றார். நிறைவில், நகரப் பொருளாளர் எ. ஸ்டீபன் ராஜ் நன்றி கூறினார்.