காலநிலை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய வகையில் இந்தியா பாதுகாக்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
சென்னை கோயம்பேடு பகுதியில் மனுஸ்மிருதி நூலை பொதுமக்களுக்கு விலையில்லாமல் தொல்.திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு விலையில்லாமல் மனுஸ்மிருதி புத்தகங்களை வழங்கினோம். அரசியலமைப்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும், மனுஸ்மிருதியில் கூறப்பட்டவைதான் இங்கு நடைமுறையாக உள்ளன. அது இந்து மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில்தான் இந்த நூலை அளிக்கிறோம்.
உலகம் முழுவதும் காற்று, நீா் நஞ்சாகும் நிலை உள்ளது. வல்லரசு என்கிற பெயரில் மனித குலம் பாதிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தைத் தடுக்கக்கூடிய வகையில் நாட்டை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
பரந்தூா் விமான நிலையத்தால் பாதிக்கப்படும் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.