10 சதவிகிதம் இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார ரீதியில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கான (இ.டபிள்யு.எஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி.யும் வழக்கறிஞருமான நெல்சன் உள்ளிட்டோருடன் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.