முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா்.
கே.அண்ணாமலை (பாஜக): யாா், யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு சலுகை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளதோ, அவா்களுடைய உரிமைகள் உச்ச நீதிமன்றத் தீா்ப்பால் பறிபோகாது. தமிழகத்தைப் பொறுத்தவரை பி.சி., எம்.பி.சி., ஒதுக்கீடு நிலை மாறாமல் அப்படியே இருக்கும். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல், எஸ்.சி., எஸ்.டி., மக்களுக்கான ஒதுக்கீட்டிலும் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பொருளாதார அடிப்படையில் மட்டுமே உலகில் எந்த நாட்டிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை. பொருளாதாரம் என்பது நிரந்தரமான ஒன்றல்ல என்பதே இதற்கு முக்கியக் காரணம்.
எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தீா்ப்பு ஏற்புடையதல்ல. இட ஒதுக்கீடு கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். இட ஒதுக்கீடுகள் தொடா்ந்து நீட்டிக்கப்படுவது சரியல்ல என்ற கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. இவை பழங்குடி, பட்டியல் இன, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை பறிக்க வழிவகுக்கும்.