கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் கைதான 6 பேரையும் நவம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, என்ஐஏ காவலில் எடுத்து 6 பேரையும் விசாரணை செய்வதற்காக இன்று காலை புழல் சிறையிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கைதான 6 பேரையும் நவம்பர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இளவழகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
என்.ஐ.ஏ நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆறு பேரையும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.