கம்பம்: கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து நாசமாகின.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தை வடபுறத்தில் 3 வளம் மீட்புப் பூங்கா கிடங்கு உள்ளது. நகர்ப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளில் இருந்து மக்கும், மக்கா குப்பை எனப் பிரித்தெடுத்து மறுசுழற்சி செய்யக்கூடிய நெகிழி, செருப்பு, தண்ணீர் கேன் உள்ளிட்ட பொருட்களை கிடங்கில் சேமித்து வைத்து பண்டல்களாக கட்டப்பட்டு மறுசுழற்சி மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதன்கிழமை மதியம் 3-வது வளம் மீட்புப் பூங்கா கிடங்கில் இருந்து புகை வந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராஜலட்சுமி தலைமையில் தீயணைப்புப்படையினர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் மின்கசிவின் காரணமாக கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிய வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் உள்ள இதர 2 வளம் மீட்பு பூங்கா கிடங்கில் தீ பரவுவது தடுக்கப்பட்டது.