வாழப்பாடியில் மேலும் இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு: போலீஸார் அதிர்ச்சி

வாழப்பாடி பேரூராட்சியில் மேலும் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது போலீஸாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி பேரூராட்சியில் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது போலீசாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி பேரூராட்சியில் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது போலீசாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  மேட்டுப்பட்டி சேத்துக்குட்டையில் கறிக்கடைக்காரர் வீட்டில் 58 சவரன் தங்க நகைகள், ரூ 2.36 லட்சம் ரொக்கப் பணம் சொகுசுகார் ஆகியவை மர்ம கும்பலால் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், வாழப்பாடி பேரூராட்சியில் மேலும் 2 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது போலீசாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சேத்துக்குட்டையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கறிக்கடைக்காரர் ஜெயப்பிரகாஷ்(45).என்பவரது வீட்டில் புகுந்த மர்ம கும்பல், 58 சவரன் தங்க நகைகள், ரூ 2.36 லட்சம் ரொக்கப் பணம், சொகுசுகார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  வாழப்பாடியில் மேலும் 2 வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது தெரியவந்துள்ளது.

வாழப்பாடி பேரூராட்சி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேங்காய் உரிக்கும் கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (42). இவர் செவ்வாய்க்கிழமை இரவு கீழ்த்தள வீட்டுப் பகுதியை பூட்டிவிட்டு, மேல் தளத்தில் குடும்பத்தோடு தூங்கி உள்ளார். புதன்கிழமை அதிகாலை கீழ்த்தளத்திற்கு வந்து பார்த்தபோது, பூட்டப்பட்டிருந்த வீட்டு கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.41,000 பணம், ஒரு சவரன் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வாழப்பாடி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திரன் (46) என்பவர், இரு நாள்களுக்கு முன்பு, குடும்பத்தோடு சேலத்திலுள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து 2 சவரன் தங்க நகை, ரூ.10,000 பணம் ஆகியவற்றை  திருடிச் சென்றது தெரியவந்தது. 

இது குறித்து இருவரது புகாரின் பேரிலும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வாழப்பாடி அருகே சேத்துக்குட்டையில் 60 சவரன் தங்க நகை, ரூ.2.36 லட்சம் பணம், சொகுசுகார் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வாழப்பாடி பேரூராட்சியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் மர்மகும்பல் கைவரிசை காட்டியுள்ளது பொதுமக்களிடம் மட்டுமின்றி, வாழப்பாடி போலீசாரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாழப்பாடி பகுதியில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை அதிகரிக்கவும், சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தியும், தொடர் திருட்டு சம்பவங்களை நடைபெறாமல், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com