கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து அணையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 136.25 அடி உயரமாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). அணையில் நீர் இருப்பு 6,181 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,274 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 511 கன அடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. பெரியாறு அணையில் மழை இல்லை, தேக்கடி ஏரியில் 0.4 மில்லி மீட்டர் மழை பெய்தது.
முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 136 அடியை எட்டியது, இதனால் அணையின் உபரி நீர் வெளியேறும் கரையோர பகுதிகளான கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் சப்பாத்து, வல்லக்கடவு, வண்டிப் பெரியாறு மக்களுக்கு பெரியாறு அணை பொதுப்பணித்துறை தேக்கடி அலுவலகத்திலிருந்து அணையின் உதவி பொறியாளர் ராஜகோபால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு அறிவித்தார்.